ஜானகி அம்மா பேத்தி என்று பாராட்டப்பட்ட ஸ்ருதி!

janaki-pethiயூடிபில் மட்டும் 10 இலட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ள “திக்கித் தெணறுது தேவதை” பாடல் மூலமாக அறிமுகமான ஸ்ருதி, இப்போது ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ், U.P.மருது இயக்கத்தில் வெளியாகியுள்ள “அகத்திணை” படத்தில் கவிஞர் வைரமுத்து வரிகளில் மரியா மனோகர் இசையில் உருவாகியுள்ள “தந்தையும் நீயே, தாய்மடி நீயே” என்ற பாடலை பாடியுள்ளார்.

தாய் இல்லாமல் தந்தையால் வளர்க்கப்படும் ஒரு பெண் குழந்தை, தன் தந்தையை பற்றி புகழ்ந்து பாடுவதாக அமைந்துள்ளது இந்த பாடல்.

மரியா மனோகரின் இசைக்கூடத்திற்கு இந்த பாடலை பாடுவதற்காக சென்ற ஸ்ருதியிடம், இந்தப்பாட்டு ஒரு பத்து வயது குழந்தை பாடுற பாட்டு, நீ பெரிய பொண்ணா இருக்கம்மா, உன்னோட குரல் செட்டாகாது, அடுத்த படத்தில் நீ பாடு என்றாராம், இசையமைப்பாளர் மரியா மனோகர்.

ஆனால், நான் பாடுறேன் சார் என்று சொன்ன ஸ்ருதி, பத்து வயது குழந்தை குரலில் பாடி அசத்தினாராம். பாடலைக்கேட்டவர்கள் அனைவரும் பாடலைப் பாடிய அந்த சிறுபெண் யாரெனக் கேட்க, தற்போது +2 படித்துக்கொண்டிருக்கும் ஸ்ருதி தான் இந்த பாட்டை பாடினாள் என்று கூறியுள்ளார் இசையமைப்பாளர்.

பாடலையும் இந்த தகவலையும் கேட்ட அனைவரும் ஆச்சர்யம் அடைந்ததோடு ஸ்ருதியை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். அதோடு தமிழ் சினிமாவில் குழந்தை குரலில் ஜானகி அம்மா தான் பாடி அசத்துவாங்க. அப்டி பாத்தா உன்னை ஜானகி அம்மா பேத்தின்னு சொன்னாலும் தப்பில்ல என்று சிலர் பாராட்டியதைக் கேட்டு மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறார் ஸ்ருதி.

”ஜானகி அம்மா பெரிய லெஜண்ட், அவங்களுக்கு இணை அவங்க மட்டும் தான்… நான் இப்போ தான் சினிமாவுக்கே வந்திருக்கேன். அவங்களோடு சேர்ந்து என் பெயர் சொல்லப்படுவதை என் பாக்கியமாக சிரம் தாழ்ந்து ஏத்துக்கிறேன். இந்த வாய்ப்பை எனக்கு தந்த மரியா மனோகர் சாருக்கும் எழுதிய வைரமுத்து சாருக்கும் மற்றும் படக்குழுவினருக்கும் என் நன்றிகள்., ”என்கிறார் ஸ்ருதி

மதுரை மாவட்டம், தேசிய செய்திகள், பள்ளிசாலை, சயனம், சாந்தம், ரணம் உள்பட பல படங்களில் ஸ்ருதி குரலில் பாடல்கள் பதிவாகி உள்ளன.

இந்த ஸ்ருதியின் இசை உலகெலாம் ஒலிக்கட்டும்.