’டார்க்’ (Dark) திரைப்பட விமர்சனம்

அஜய் கார்த்தி ,அஞ்சனா நேத்ரன், நட்டி நடராஜ், கே பாக்யராஜ் , விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர் .
எழுதி இயக்கியிருக்கிறார் கல்யாண் கே ஜெகன். ஒளிப்பதிவு: ரவி சக்தி, படத்தொகுப்பு : கதிரேஷ் அழகேசன், இசை: மனு ரமேஷன், , கலை இயக்கம்: சண்முகராஜா.

எம் ஜி ஸ்டுடியோஸ் மற்றும் பைவ் ஸ்டார் ஸ்டோரி சார்பில் ஏ பி வி மாறன் மற்றும் கணேஷ் கே பாபு தயாரித்துள்ளனர்.
பைவ் ஸ்டார் செந்தில் வெளியிட்டுள்ளார்.

குரூப்-1 தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மத்தியில் நடக்கும் வழிகாட்டுதல் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகத் துணை ஆணையாளராக இருக்கும் நட்டி கலந்து கொள்கிறார் .அவரது பெயர் பாலச்சந்தர். அவர் கூடியிருக்கும் மாணவர்களிடம் தேர்வு எழுதும் போதும் பணியின் போதும் தாழ்வுணர்ச்சி கொள்ளக்கூடாது எதற்கும் பயப்பட வேண்டாம் என்று கூறுகிறார்.அப்போது ஒரு மாணவர் எழுந்து’ நீங்கள் உங்கள் காவல்துறை வாழ்க்கையில் எப்போதாவது பயந்ததுண்டா? ‘என்று கேட்கிறார். ‘ஆம்’ என்று நட்டி சொல்லத் தொடங்குகிறார்.  திடுக்கிடும் வகையில் மரணங்கள் நடந்த இடத்திற்கு ஒரு போலீஸ் விசாரணை அதிகாரியாகச் சென்று நட்டி விசாரணை செய்யும் போது நடந்ததாக அந்தக் கதை சொல்லப்படுகிறது.

பாக்யராஜுக்குச் சொந்தமான ஒரு வீட்டில் ஒரு நாள் பாக்யராஜின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த மூன்று இளைஞர்களில் ஒருவர், மற்ற இருவரையும் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்கிறார். அப்படி மர்மமாக மரண சம்பவங்கள் நடந்ததால் அந்த வீட்டுக்கு யாரும் வாடகைக்கு வரத் தயங்குகிறார்கள்.  அந்த வீட்டுக்கு அது பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் துணிச்சலுடன் உள்ளே நுழைகிறார் நாயகன் அஜய் கார்த்தி.
முதலில் என்னமோ துணிச்சலாக அந்த வீட்டுக்குள் நுழைந்து விடுகிறார் அஜய். ஆனால் போகப் போக அங்கே மனித சந்தடியற்ற அமானுஷ்யமான சம்பவங்கள் நடப்பது போல் காட்சிகள் தென்படுகின்றன.அது உண்மையா பிரம்மையா என்று கூட ஒரு குழப்பம் வருகிறது.ஆனாலும் அவருக்கு காட்சிகள் தொடர்ந்து வரவே அதிர்ச்சிக்குள்ளாகிறார்.

ஒரு நாள் அங்கு போலீஸ் சென்ற போது பாக்யராஜ் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார் அருகில் அஜய் கார்த்தி உடம்பெங்கும் பயங்கரமான காயங்களுடன் இறந்து(!) கிடக்கிறார். ஆனால் நட்டியைப் பார்த்தவுடன் திடீரென்று எழுந்து பேசிவிட்டு மீண்டும் சரிந்து விழுகிறார். பிணம் பேசியதைக் கண்ட நட்டி அதிர்ச்சி அடைகிறார்.அவர் எப்படித் தன் பெயரைச் சொன்னார் என்று குழப்பமாக இருக்கிறது.
உடனடியாக அவரை மருத்துவமனை கொண்டு சென்று உயிர் உள்ளதோ என்று காப்பாற்ற நினைக்கிறார். ஆனால் அவர் இறந்து விடுகிறார்.இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று விசாரணையைத் தீவிரப் படுத்துகிறார் நட்டி. அதற்குப் பிறகு அவருக்குக் கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சிகரமானவை.அவை என்ன என்பதுதான் ‘டார்க்’ படத்தின் மீதிக் கதை.அந்த மீதிக் கதையைத் திகிலூட்டும் சம்பவங்களால் கோர்த்து பார்ப்பவர்களைப் பயத்தால் படபடக்க வைக்கிறார் இயக்குநர். 

இதுவரை பேய்ப் படங்கள்,திகில் படங்கள் எதுவாக இருந்தாலும் அதை நகைச்சுவையாக மாற்றும் போக்கு நிலவி வந்தது. ஆனால் முழுக்க முழுக்க பயத்தையே நோக்கமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி இருக்கிறது.‘டார்க்’ பார்வையாளர்களைப் படம் முழுவதும் படபடப்பாக வைத்திருக்கிறது.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அஜய் கார்த்தி படம் முழுக்க முகம் வியர்க்க பயத்தில் உறைபவர் நம்மையும் பயத்தில் கலங்க வைக்கிறார்.திகில் அமானுஷ்ய சக்தி என்பதை அறிந்த போதும் அங்கு நடக்கும் சம்பவங்களோடு அவர் எதிர்கொள்வதும் அச்சம் கொள்வதும் நிச்சயம் படம் பார்ப்பவர்களைப் பயம் கொள்ள வைக்கும்.அந்த அச்ச உணர்வைத் தனது முகபாவாவனைகளின் மூலம் நன்றாகக் கடத்தியிருக்கிறார்.பயத்தில் அவரது குணச்சித்திரம் சிதைந்து மாறுவதையும் நம்மை உணர வைக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நட்டி, வழக்கமான குற்ற வழக்கு  பின்னணி குறித்து அறிந்து, அவர் வெளிப்படுத்தும் நடிப்பு அசத்தல்.

வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் கே.பாக்யராஜ், தனது முதிர்ந்த நடிப்பின் மூலம் தனது திரை இருப்பை நிறைவு செய்துள்ளார்.பெரும்பாலும் இறக்கும் காட்சியில் நடித்திராத பாக்யராஜ் இதில் இறப்பது போல் நடித்திருப்பதும் அண்மையில் அவர் மரணம் அடைந்ததும் ஒப்பு நோக்கி அவரது இன்மையை அறியும்போது வருத்தமாக உள்ளது.

அஞ்சனா நேத்ரன், விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் சிறிய வேடம் என்றாலும், திரைக்கதையோடு பயணம் செய்து கதையின் போக்குக்கு உதவியுள்ளார்கள்.குறிப்பாக அஞ்சனா சற்று வேறு முகம் காட்டிப் பார்ப்பவர்களுக்கு மறக்க முடியாத உணர்வை அளிக்கிறார்.
ஒரு நடிகராகவே டிடிவி கணேஷ் வந்து கலகலப்பூட்டுகிறார். படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் அவர் செய்யும் உரையாடல்கள் கலகல .

ஒளிப்பதிவாளர் ரவி சக்தி,குறைந்த எண்ணிக்கையிலான கதை நிகழ்வு இடங்களில் படப்பிடிப்பு நடத்தி இருந்தாலும் அந்தக் குறை தெரியாத அளவிற்கு இருள் ஒளி விளையாட்டுகளில் அற்புதமான கோணங்களில் தனது திறமையைக் காட்டியுள்ளார்.இருளில் இத்தனை நிறங்களா என்று வியக்கும் வண்ணம் அவரது ஒளிப்பதிவு உள்ளது.

மனு ரமேஷின் பின்னணி இசை திகில் காட்சியின் தன்மையைத் தீவிரமாக உணர வைக்கிறது.ஒலி அளவைக் கூட்டிப் பயமுறுத்தும் வழக்கமான பின்னணி இசையை அமைக்காமல் சில இடங்களில் வாத்தியங்களை ஒலிக்க விடாமல் மௌனித்துக் கூட பயமுறுத்தி உள்ளார்.
இந்தத் திகில் படத்தில் தொய்வு விடாமல் படத்தொகுப்பு செய்துள்ளார் கதிரேஷ் அழகேசன்.சண்முகராஜாவின் கலை இயக்கத்தில் காட்டப்படுகிற வீடு பார்க்கும்போதே அச்சம் தருகிறது.

எழுதி இயக்கியிருக்கும் கல்யாண் கே.ஜெகன், ஒரு பரபரப்பான திகில் கதையை மனிதஉளவியல் பார்வையில் உருவாக்கி இருக்கிறார்.பேய் பிசாசு காட்டாமல் மனித மனத்தின் உணர்வுகளைக் காட்டியே எடுத்துக்கொண்ட கதையை தனது நேர்த்தியான திரைக்கதை மூலம் திகில் படமாக உருவாக்கி வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தத்தில், இந்த ‘டார்க்’நிச்சயமாக திகில் பட ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.