திரைப்படத் தயாரிப்பில் பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனம் : ஏ. ஆர். ரகுமான் , பிரபுதேவா இணையும் படத்தைத் தயாரிக்கிறது!

திரைப்படத் தயாரிப்பில் இறங்கியுள்ள பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனம் ஊடகங்களுக்கு அனுப்பி உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

அன்புள்ள பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு..

பிஹைண்ட்வுட்ஸ்  தனது அடுத்த முயற்சியாக திரைப்பட தயாரிப்பில் களமிறங்குகிறது. எங்களது முதல் தயாரிப்பில் பிரபு தேவா கதாநாயகனாக நடிக்க, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்த பெரும் நட்சத்திரங்கள் இணையும் படத்தை, Behindwoods நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான (CEO) மனோஜ் NS இத்திரைப்படத்தை தயாரித்து, இயக்குகிறார்.

இந்திய திரையிசை மற்றும் நடனத்துறையில் பேராற்றல் மிக்கவர்களான இருபெரும் ஜாம்பவான்களின் கூட்டணி ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திரைப்படம் மூலம் மீண்டும் இணைத்துள்ளோம். இசை, நடனம், பாடல்கள், நகைச்சுவை என முற்றிலும் பொமுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக இருக்கும் படம் வெகுஜன மக்களை நிச்சயம் ஈர்க்கும்.

இத்திரைப்படத்தில் ரத்தமோ, வன்முறையோ, முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளோ எந்த வடிவத்திலும் இருக்காது. இந்திய சினிமா வரலாற்றில் இது ஒரு மிக முக்கிய திரைப்படமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இப்படத்தில் பங்காற்றுவது குறித்து பேசிய இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், “சில நல்ல யோசனை நம் மனதுக்கு வரும், அதை இப்போ செய்யலாம் பிறகு செய்யலாம் என வருடங்கள் ஓடிவிடும், இந்த திரைப்படம் அதை மீண்டும் கண்டுபிடித்து என் கவனத்தை ஈர்த்தது” என்கிறார்.

நடனப்புயல் பிரபு தேவா கூறியபோது, “நடன இயக்குனர்களை ஊக்கப்படுத்திய இசைப்புயல் ரஹ்மானுடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார்.

மனோஜ் NS கூறுகையில், “இந்தத் திரைப்படம் இந்தியாவின் இரண்டு மாபெரும் கலைஞர்களான ஏ.ஆர் ரஹ்மான், பிரபு தேவா இருவரையும் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

காமெடி நடிப்பில் உச்சம் தோட்ட யோகி பாபு ஒரு வித்யாசமான, மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள சினிமாவில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.”

இன்னும் பெயரிடப்படாத படத்திற்கு சில மாதங்களில் தலைப்பை வெளியிடுவோம். தமிழில் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா அவர்களின் 6-வது கூட்டணியைப் குறிக்கும் வகையில் #arrpd6 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்குகிறது. 2025 ஆம் ஆண்டு பான் – இந்தியா படமாக திரைக்கு வர திட்டமிட்டு உள்ளோம். எங்களின் புதிய முயற்சிக்கு அனைவரும் உளமார ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றியுடன்,
Team Behindwoods