போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி!

தமிழக காவல்துறையினர் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்து கொண்டார்.

நிகழ்வில் கார்த்தி பேசியதாவது:
”இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. இதனைப் பயன்படுத்தும் இளைஞர்களின் வயது வரம்பும் குறைந்து கொண்டே வருகிறது. முன்பெல்லாம் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் மது அருந்தினர். இப்போது பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டனர்.


பள்ளிகளுக்கு அருகே கூட போதைப்பொருட்கள் சகஜமாக விற்கப்படுகின்றன. போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் நம்மிடையே இருப்பவர்கள் தான். அதனை விற்பவரும், புழக்கத்தில் விடுபவரும் நம்மிடையே இருப்பவர்கள் தான். ஆக நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் போதைப்பொருட்களின் பயன்பாட்டைத் தடுக்க முடியும்.மாற்றத்தை கொண்டு வர முடியும்.
இது சீரியஸான விஷயம். போதைப்பொருட்களில் ஆர்வத்தைக் காட்டுவதற்குப் பதிலாக இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்தைச் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் தான் இளைஞர்களின் நண்பனாக இருக்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் மகிழ்ச்சி, சோகம் என எல்லா தருணங்களிலும் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளைக் கவனித்து நண்பர்களாக வழிநடத்த வேண்டும்”
இவ்வாறு கார்த்தி பேசினார்.