தேவைகள் எல்லாம் நிறைவேற்றப்படும் : பிஆர்ஓ யூனியன் விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு!

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழகப் பள்ளிக் கல்வி துறை – தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தி துறை அமைச்சரான ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

தயாரிப்பு நிறுவனம் – தயாரிப்பாளர் – திரைப்படம் – நட்சத்திர கலைஞர்கள் – தொழில்நுட்ப கலைஞர்கள் – விளம்பரங்கள் – பத்திரிகையாளர்கள் – ஊடகவியலாளர்கள் – திரையரங்குகள் – ரசிகர்கள்- திரை ஆர்வலர்கள் – என ஒரு திரைப்படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து அத்திரைப்படம் முழுவதுமாக தயாராகி, அது தொடர்பான தகவல்களை ஊடகங்கள் மூலமாக மக்களுக்கும், ரசிகர்களுக்கும்  சென்றடையச் செய்வதுடன்.. அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதனை முறையாக ஆவணப்படுத்தும் வரலாறு வரை தங்களுடைய பணிகளை செழுமையாக முழுமையான அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பவர்கள் தான் திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள்.

சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகமாகியுள்ள இந்தத் தருணத்திலும் பத்திரிக்கைத் தொடர்பாளர்கள் டிஜிட்டல் தளத்தில் வெளியாக வேண்டிய செய்திகளை மட்டுமல்ல சமூக வலைதளங்களில் வெளியாகும் எதிர்மறையான விமர்சனங்களுக்கு விளக்கங்கள் வெளியிடும் பொறுப்பினையும்.. ஏற்று அயராது உழைக்கும் பத்திரிகைத் தொடர்பாளர்களின் நலன்களுக்காக இயங்கும் சங்கத்திற்கு புதிதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பி யுவராஜ் தலைவராகவும், என். விஜய முரளி செயலாளராகவும், வீ. கே. சுந்தர் பொருளாளராகவும், எஸ். புவனேந்திரன் மற்றும் எஸ். சதீஷ்குமார் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், பாலன் என்கிற ஜி. பாலசுப்பிரமணியன் மற்றும் ஆர். உதயகுமார் ஆகியோர் இணைச் செயலாளராகவும் பதவி ஏற்று கொண்டனர். இந்த நிகழ்வில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் – தமிழ் திரைப்படத்தின் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் – தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம்- தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம்- தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்-  நடிகர்கள் அர்ஜுன் தாஸ் -அசோக் செல்வன்- தயாரிப்பாளரும், இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் – தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பஸ்லியான் – தயாரிப்பாளர் ஜே. எம். பஷீர் உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு, புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் ஜி கே எம் தமிழ் குமரன் பேசுகையில், ” திரைப்படத் துறையில் முக்கியமான சங்கம்- தவிர்க்க முடியாத சங்கம்- பி.ஆர்.ஓ சங்கம். எண்ணற்ற சங்கங்கள் இருந்தாலும்… இந்த சங்கம் முக்கியமானது. தேர்தல் நடைபெற்று ,தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரை நிகழ்த்த வருகை தந்திருக்கும் மாண்புமிகு அமைச்சர் ராஜ் மோகன் அவர்களுக்கு நன்றி. யுவராஜ் ஒரு துடிப்பான இளைஞர். அவரது தலைமையில் இந்த சங்கம் சிறப்பாக செயல்படும். இதற்கு நான் சார்ந்த தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்த் திரைப்படத் துறையில் எல்லா சங்கங்களுக்கும் ஒரு அலுவலகம் சொந்தமாக இருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு  என எந்த அலுவலகமும் இல்லை. இந்த அலுவலகம் வாடகையில் தான் இயங்கி வருகிறது. புதிதாக அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை தமிழக அரசு வழங்கினால்.. நாங்கள் கட்டடத்தைக் கட்டிக் கொள்கிறோம். இதனை வழங்கினால் சிஎம்முக்கும் , அமைச்சருக்கும் காலத்திற்கும் அழியாத நற்பெயர் கிடைக்கும். பெருமையாகவும் இருக்கும்.

2015 ஆம் ஆண்டில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரையில் சிறிய முதலீட்டுத் திரைப்படங்களுக்கான தமிழக அரசின் சார்பில் வழங்க வேண்டிய மானியங்கள் வழங்கப்படவில்லை. அதனை விரைவில் வழங்க வேண்டும் என தமிழக அரசை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றார் .

அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், ” இந்த உலகத்துடன் ஒரு உறவுப் பாலமாய் தமிழ் சினிமாவை- இந்த கலைத்துறையை- இணைக்கக் கூடிய அத்தனை சினிமா பத்திரிக்கையாளர்கள் மற்றும் பத்திரிக்கை தொடர்பாளர்களுக்கும் நான் நெஞ்சார தலை வணங்குகிறேன் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்.

இங்கு பணியாற்றும் அனைத்து பிஆர்ஓக்களிடமும் நான் எஃப் எம்மில் பணியாற்றிய போதும்…. சோசியல் மீடியாவில் பணியாற்றிய போதும்… தனியாக யூட்யூப் சேனலை தொடங்கிய போதும்…. திட்டு வாங்கிய ஒருவன் என்றால், அது நான் தான். கடந்த காலங்களில் இத்துறையில் பத்திரிகைகளுக்கும், வெப்சைட்களுக்கும் என பத்திரிகையாளர் சந்திப்புகளில் அனுமதிப்பது தொடர்பான சிக்கல்கள் உருவானது. அப்போதும் பொறுமையாக இருந்து விளக்கமும், ஆதரவும் அளித்தனர். அதன் பிறகு கால மாற்றத்தை -தொழில்நுட்ப மாற்றத்தை- உணர்ந்து ஆதரவை வழங்கத் தொடங்கினார்.

அத்துடன் அனைத்து பிஆர்ஓக்களுக்கும்… நல்ல தமிழில் குறைவான சம்பளத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூடிய தொகுப்பாளர் ஒருவர் தேவை என்றால்… உடனடியாக அவர்களுக்கு நினைவுக்கு வருவது நான்தான். மலிவு விலை தொகுப்பாளர் என்றால் ராஜ்மோகன் தான். அது நான்தான் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை கொடுத்தால் அது விருது அல்ல. விருது என்றால் ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வரின் அனுமதியைப் பெற்று வெள்ளித்திரை- சின்னத்திரை- தமிழ்த் திரை- விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நல்ல படைப்புகள் தான் நமக்கு ஆக்சிஜன். தமிழ் சினிமாவில் தன் தலையை உண்மையிலேயே அடமானம் வைத்து முதலீடு செய்யும் முதலாளிகள் என்றால் … அது நம்முடைய தயாரிப்பாளர்கள் தான்.

தயாரிப்பாளர்களால் சில தருணங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊதியங்களைத் தர இயலாத போது.. அவர்களுக்குப் பட வாய்ப்பையே வழங்கியுள்ளனர். அத்தகைய தாயுள்ளம் கொண்டவர்கள் தான் தயாரிப்பாளர்கள். தயாரிப்பாளர்கள் சங்கம் இல்லை என்றால் நாம் யாரும் இங்கில்லை.‌

தமிழ் சினிமாவில் கைகளாக இருப்பவர்கள் தான் பாடலாசிரியர்கள்- பாடகர்கள்- பாடகிகள்- இசையமைப்பாளர்கள்-. படத்திற்காக ஓடியதா? இளையராஜாவின் இசைக்காக ஓடியதா? என தெரியாத பல வொண்டர்ஃபுல் மேஜிக் தமிழ் சினிமாவில் உள்ளது. அவர்கள் இல்லை என்றால் நாம் இல்லை.தமிழ் சினிமாவை தாங்கிக் கொண்டு ஓடக்கூடிய கால்கள் என்றால்… ஃபைட் மாஸ்டர்ஸ் மற்றும் டான்ஸ் மாஸ்டர்ஸ் தான். இவர்கள் ரத்தத்தை வியர்வையாகக் கொட்டி ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருப்பார்கள்.

தமிழ் சினிமாவின் வயிறாகத் திகழ்பவர்கள் புரொடக்ஷன். அஞ்சு பேர் இருந்தால்.. கேரவனில் சாப்பாடு. 50 பேர் இருந்தால் கேரவன் அருகே சாப்பாடு. 500 பேர் இருந்தால் சாப்பாட்டை எப்படியாவது வழங்கி விடுவார்கள். ‘காந்தி’ திரைப்படத்திற்காக கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு லட்சம் பேர் படப்பிடிப்பில் கலந்து கொண்டனராம். இந்தியாவில் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. அதில் கலந்து கொண்டவர்களுக்கு காலை உணவு மதிய உணவு எப்படி கொடுத்திருப்பார்கள்? எப்போது உணவு இடைவேளை வழங்கப்பட்டிருக்கும்? என்பதையெல்லாம் யோசித்துப் பார்க்கவே முடியாது.

இந்த சினிமாவின் நாடி நரம்புகளாக ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் முகம் தெரியாத நாயகர்களாக இருப்பவர்கள்… ரத்தமாக இருப்பவர்கள்… யார் என்றால் பி ஆர் ஓக்கள் ஆகிய நீங்கள் தான். நீங்கள் ஓடி ஓடி அங்கு செல்ல வேண்டும்…. இங்கு செல்ல வேண்டும்.. படத்தை விளம்பரப்படுத்த வேண்டும்…. என ஓடிக்கொண்டே இருப்பீர்கள்.

அப்படி என்றால் சினிமாவில் இதயம் யார்? உண்மையிலேயே தன்னுடைய இதயத்தைப் பற்றிக் கவலைப்படாத இயக்குநர்கள் தான். அவர்கள் தான் தங்களுடைய இதயத்தை பற்றி கவலைப்படாமல் எப்படியாவது ஒரு நல்ல படத்தை எடுத்து விட மாட்டோமா…! எடுத்து விட முடியாதா..! என 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலிகிராமத்தின் காவேரி கார்னர் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஏராளமான அண்ணன்களை  நான் அறிவேன். இந்த மொத்த சினிமாவின் உடலுக்கும் ஒரு அழகான ஸ்கின் வேண்டுமல்லவா.. அது நம்முடைய மேக்கப் டிபார்ட்மெண்ட். இப்படி எல்லாமே இருக்கும் சினிமாவில் ஆக்சிஜன் யார்? என்றால் துணை இயக்குநர்கள் தான் . இயக்குநர்கள் இல்லாமல் கூட இரண்டு மணி நேரங்களில் ஏதேனும் சில ஷாட்களை படமாக்கலாம். துணை இயக்குநர்கள் இல்லாமல் ஒரு ஷாட்டை கூட படமாக்க  முடியாது. இவர்களும் முகம் தெரியாத ஹீரோக்கள் தான். இப்படி எத்தனையோ முகம் தெரியாத ஹீரோக்கள் சினிமாவில் இருக்கிறார்கள். இப்படி அத்தனை நபர்களிடமும் பாரபட்சம் இல்லாமல் பழகக் கூடியவர்கள் இந்த பிஆர்ஓ க்கள்.

அண்ணன் செல்வமணி பேசுகையில் பேமெண்ட் பென்டிங் பற்றி குறிப்பிட்டார். அது என்ன? என்பதை நான் கூறுகிறேன். கடந்த காலத்தில் எல்லா சங்கங்களும் சேர்ந்து முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு  நூற்றாண்டு விழாவைக் கொண்டாடினர். அந்த விழாவில் தொகுப்பாளராக பணியாற்றுவதற்காக இயக்குநர் லிங்குசாமி -பாண்டிராஜ் -என பலரிடமிருந்து போன் கால்ஸ் வந்து கொண்டே இருந்தது. அப்போது எனக்கு இந்த நிகழ்ச்சிக்கான ஊதியம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேகம் இருந்தது. அதனால் நான் சமாளித்துக் கொண்டே பதில் அளித்தேன். அதன் பிறகு ஒரு பிஆர்ஓ போன் செய்து, ‘ஒரு நிமிடம் ஆர் கே செல்வமணி உங்களிடம் பேச வேண்டும்’ என்றார். அவர் போன் செய்தவுடன், ‘நான் வந்து கொண்டிருக்கிறேன்’ என சொல்லிவிட்டேன். அன்றிலிருந்து ஒரு மாதம் வரை எனக்குத் தெரிந்து யாரும் தூங்க கூடவில்லை. தொடர்ந்து அதற்காக உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஏராளமான ஸ்கிரிப்டுகளை எழுதி எழுதி அதனை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் என தமிழ் சினிமாவின் மொத்த பேரும் வருகை தந்திருந்தனர். இப்படிப்பட்ட மனித உழைப்பு எனக்குத் தெரிந்து இதுவரை இல்லை என்றே சொல்லலாம். இப்படிப்பட்ட நேர்மையான உழைப்பை வழங்குவது திரை உலகம் தான். இவர்கள் அனைவரும் நடமாடும் உழைப்பாளர்கள் சிலைகள் தான். அப்படி இருக்கும்போது நீங்கள் உங்களுடைய கோரிக்கைகளை உரிமையுடன் கேட்கலாம்.

‘தவமாய் தவமிருந்து’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சிக்காக இயக்குநர் சேரனுக்கு தேசிய விருதுகளைக் கொட்டிக் கொடுக்க வேண்டும். அப்படி ஒரு காத்திரமான படைப்பு.‌ நாங்கள்தான் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். உங்களுக்கு என்னென்ன தேவையோ…! அவை அனைத்தையும் மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.

முதல் சந்திப்பில் தமிழக முதல்வர் என்னை அழைத்து, ‘மானியத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் படங்கள் எதுவும் பெண்டிங் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு சார்பில் வழங்கப்படும் மானியங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைவு படுத்துங்கள் ‘ என சொன்னார். இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு காலத்தில் தமிழ்நாடு தான் சினிமாவில் கேப்பிட்டல் ஆக இருந்தது. இங்கு தான் அனைத்து படப்பிடிப்புகளும் நடைபெறும். கொஞ்சம் கொஞ்சமாக வெவ்வேறு மாநிலங்கள் சென்றது. அதற்கு பலதரப்பட்ட காரணங்கள். அவற்றையெல்லாம் பகுப்பாய்வு செய்வதுதான் எங்களுடைய வேலை.

சூட்டிங் ஸ்பாட்டில் மேனேஜரோ… பி ஆர் ஓக்களோ… பர்மிஷனுக்காக பலருக்கு காசு கொடுக்க வேண்டியதிருந்தது. அதற்கு தற்போது ‘நோ ‘ சொல்லப்பட்டிருக்கிறது. யார் கேட்டாலும் ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டாம். உங்களுடன் சிஎம் இருக்கிறார். புரொடக்ஷன் மற்றும் ஆர்டிஸ்டிகளுக்கு என்ன தேவையோ… அதை மட்டுமே பார்த்துக் கொள்ளுங்கள்.

உலகத்தில் வேலையை செய்வதற்காக யாரும் பாராட்ட மாட்டார்கள் ஏனெனில் நம்முடைய சிஸ்டம் அப்படி மாறிவிட்டது .நாம் வேலையை செய்து கொண்டிருக்கிறோம். அதை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறோம். அதை உண்மையாக செய்து கொண்டிருக்கிறோம். ஒளிவு மறைவு இல்லாமல்… வெளிப்படை தன்மையுடன் இயங்குவதற்கான ஒரு முயற்சிதான். ஏனெனில் சினிமா துறையில் தான் கருவாகி… உருவாகி… இன்று ஒரு மாமனிதர் முதலமைச்சர் ஆக கிடைத்திருக்கிறார்.

இந்த மேடையில் எங்களுடைய அண்ணன்கள் எதையெல்லாம் வேண்டுமெனக் கேட்டார்களோ… அதை எல்லாம் செய்வதற்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

முத்துக்காளை மனைவிக்கு ஒரு பிரச்சனை என்று போது.. என்னை அழைக்கவில்லை என்றாலும்.. நானாக சென்று, ‘அவர்களை நடிகராக பார்க்காதீர்கள். ஒரு கல்வியாளராக பாருங்கள் ‘என்று அறிவுறுத்தி முழுமையான மருத்துவ சிகிச்சையை கிடைக்கச் செய்தோம்.

பாவா லக்ஷ்மணன் அண்ணனுடன் நான் ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றியதில்லை. இருப்பினும் எம்எல்ஏ ஹாஸ்டலில் அவருக்கு இடம் கொடுத்துவிட்டேன். கேப்டன் இல்லையென்றால் என்ன…. கேப்டனின் படங்களை பார்த்து தான் நாங்கள் அனைவரும் வளர்ந்திருக்கிறோம். நீங்கள் வாருங்கள் என்று அவரை அன்புடன் அழைத்து அந்த விடுதி அறையை கொடுத்தேன்.

பாரதிராஜா- பாக்யராஜ்- மறைந்த போது ஓடோடி சென்று முழு அரசு மரியாதை வழங்கியது. அது எங்களுடைய கடமை. அவர்களுக்கு செய்யாமல் நாங்கள் வேறு யாருக்கு செய்யப் போகிறோம்.

நான் பள்ளி கல்வித்துறை அமைச்சராகவும் இருக்கிறேன். அரசு பள்ளியில் படிக்கும் ஆட்டிசம் குழந்தைகள்.. என்னுடைய அறைக்கு வந்தவுடன்.. அவர்களை ஒரு குட்டி நாற்காலியில் அமர வைப்பேன். சாக்லேட் தருவேன். அவர்களிடம் நீண்ட நேரம் உரையாடுவேன். அவர்களின் பெற்றோர்கள் தான் பதற்றமடைவார்கள்.  ஆனால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்காமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையை பார்த்து அவர்களுடைய பெற்றோர் கண்ணீர் சிந்துவார்கள். அப்போது ஒரு அதிகாரி நல்லதொரு ஐடியாவை கொடுத்தார். அதன்படி சென்னை பிலிம் இன்ஸ்டிடியூட்டில் உள்ள தியேட்டரில் சென்னையில் அரசு பள்ளியில் படிக்கும் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு உலக சினிமாவை திரையிட்டோம். அந்த பிள்ளைகள் அந்த சினிமாவை பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதை பார்த்தவுடன் இத்தகைய முயற்சிகள் இனி மாதம் தோறும் மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுத்து அதை தொடங்கி விட்டோம்.

நாங்கள் பேசும்போது எங்களுடன் பேசாத அந்த குழந்தைகள்…. திரையில் தெரியும் மீனுடன் பேசுகிறது. மானுடன் பேசுகிறது. சிரித்து விளையாடினர். படத்தின் இடைவேளையின் போது குழந்தைகளுக்கு மட்டும் அல்ல அவர்களின் பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளின் உற்சாகத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

கிட்டத்தட்ட நானும் அப்படித்தான்.. கிடைத்த வேலைகளைச் செய்து, எப்படியாவது ஒரு நிலைக்கு உயர்ந்திட வேண்டும் என உழைத்துக் கொண்டே இருந்தேன். இன்று இந்த இடத்திற்கு வந்து நிற்கிறேன் என்றால் ..இவை அனைத்தும் திரைக்கலை தந்த ஒரு வலிமை. இதயத்தை தொடக்கூடிய ஒரு உணர்வு. நல்ல படைப்புகளை பார்த்து… படித்து… கேட்டு… வளர்ந்தது. இதையெல்லாம் …இப்படி எல்லாம் … செய்ய வேண்டும் என்று நினைத்து, எனக்கு மாண்புமிகு முதல்வர் கொடுக்க நல்லதொரு வாய்ப்பு இது. அவர் என் மீது வைத்த நம்பிக்கை. என் மீது இங்கு உள்ள எல்லோரும் வைத்திருக்கும் நம்பிக்கை. இதனை நான் நிச்சயமாக காப்பாற்றுவேன். கடைசி மூச்சு வரை நேர்மையாக வேலை செய்து, உங்கள் அத்தனை பேரின் கோரிக்கையையும் மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அவரின் ஆலோசனையும், அனுமதியும் பெற்று தேவைகள் எல்லாம்நிறைவேற்ற  என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என உறுதி அளிப்பதுடன்..வாழ்த்தி, வணங்கி விடைபெறுகிறேன்” என்றார்.