‘திருக்குறள் 100 ‘ மேடையில் ஒரு சாதனை: நிகழ்த்திக்காட்டிய சிவகுமார்!

ஒரு பேச்சாளர் சுதந்திரமாகத் தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் விதத்தில் ஆற்றும் உரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாவதுண்டு.  இதில் பேச்சாளருக்குத் தன் விருப்பம் போல் கருத்துகளை வெளியிடும் சுதந்திரமும்,தலைப்பு தாண்டி தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் வசதியும் உண்டு. ஆனால் ஒரு எழுதப்பட்ட புத்தகத்தை மேடையில் உரையாக ஆற்றுவது என்பது கடினமான ஒன்று. அப்படிப்பட்ட ஒரு சாதனையை நடிகர் சிவகுமார் ஈரோடு புத்தகத் திருவிழாவில் செய்துள்ளார்.
ஈரோடு மாநகரில் மக்கள்  சிந்தனைப் பேரவையின் முன்னெடுப்பில்   ’18 வது ஈரோடு புத்தகத் திருவிழா’ ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. அங்கு தான் இந்தச் சாதனையைச் சிவகுமார்  நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

திரைப்பட நடிகர், ஓவியர், பேச்சாளர், எழுத்தாளர் என்று பன்முக ஆளுமை கொண்ட  சிவகுமார் ,ஏற்கெனவே ராமாயணம் மகாபாரதம் சார்ந்த முழு நீள உரையாற்றிப் பலரையும் வியப்பில் ஆழ்த்தியவர்.அந்த உரைகள் நூல் வடிவிலும் வந்துள்ளன. இப்போது ஒரு புது முயற்சியாக, அச்சிடப்பட்டு  வந்துள்ள  ‘திருக்குறள் 100 ‘ என்கிற நூலை ஈரோடு புத்தகத் திருவிழாவில்  மக்கள் முன் உரையாக நிகழ்த்திக் காட்டினார்.

திருக்குறள் என்பது இனம், மொழி, தேசம் கடந்து மனிதர்கள்  அனைவருக்குமான ஒரு பொதுமறையாகப் போற்றப்படுகிறது.ஆனால் அது நம் சூழலில் இன்னும் எளிய மக்களைச் சென்றடையாமல் இருக்கிறது. படித்தவர்களிடமும் பண்டிதர்களிடம் மட்டும் புழங்கப்படும் ஒரு செல்வமாக திருக்குறள் இருந்து வருகிறது என்பது கசப்பானதோர் உண்மை .
திருக்குறளைப் பாமரனிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக நடிகர் சிவகுமார் நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கைக் கதைகளை இணைத்து ‘வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள்’ என்கிற பார்வையில்  ‘திருக்குறள் 100’ என்கிற நூலை எழுதி இருக்கிறார்.இதுவரை திருக்குறளுக்கு வார்த்தைகள் வடிவில் பரிதி ,பரிமேலழகர் முதல் கலைஞர் ,சாலமன் பாப்பையா வரை ஏராளமான பேர் உரை எழுதியிருக்கிறார்கள். ஆனால் சிவகுமார் வள்ளுவர் வழி நின்று வாழ்ந்த, தங்களை அறியாமலேயே குறளின் வழியே சென்ற மனிதர்களின் வாழ்க்கையின் வழியே இந்த உரையை எழுதியிருக்கிறார்.அந்த வகையில் இது ஒரு புதிய முயற்சி எனலாம்.
பிரபல நாளிதழின் (இந்து தமிழ் திசை)இணைய இதழில் தொடராக வெளிவந்த இது, இரண்டு பாகங்களாக நூல் வடிவம் பெற்றுள்ளது.முதல் 50 கதைகள் கொண்ட நூலை தமிழக அரசு  மாணவர்களுக்கான பாடப்பகுதியில் சேர்த்துள்ளது. 
இந்தத்  ‘திருக்குறள் 100 ‘ நூல் அரங்கேற்று விழா, அதாவது இந்த நூலில் உள்ள வாழ்க்கைக்கதைகள் அனைத்தையும் மேடையில் இடைவிடாது சுமார் மூன்றரை மணி நேரம் உரையாற்றி அரங்கேற்றும் விழா ‘ 18 வது ஈரோடு புத்தகத் திருவிழா’வின் பத்தாவது நாளான ஆகஸ்ட் 14-ல் நடைபெற்றது.

பொதுவாக நூல் வெளியீட்டு விழா என்பது ஒரு வகையாக இருக்கும். உரையாற்றுதல் என்பது இன்னொரு வகையாக இருக்கும் .ஆனால் ஒரு முழு நூலையும் உரையாக ஆற்றி  மேடையேற்றுவது என்கிற விதத்தில்  இது ஒரு வித்தியாசமான விழாவாக இருந்தது.
ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடந்த இந்த அரங்கேற்று விழாவின்போது கூடியிருந்த கூட்டத்தினர் சிறிதும் கவனம் சிதறாமல் சலனமற்று,   இரவு நெடுநேரம் சென்றும் இடையில் எழாமல் முழுக் கவனத்துடன் அவரது பேச்சைக் கேட்ட விதம் வியூப்பூட்டியது.
இந்த விழாவின் தொடக்கமாக இப்புத்தகத் திருவிழாவை முன்னின்று நடத்தும் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் அனைவரையும் வரவேற்று அறிமுக உரையாற்றினார். அப்போது சிவகுமாரின் பன்முக ஆற்றலை வியந்து பாராட்டிய அவர், இந்த விழாவைச் சென்னையில் பெரிய அளவில் ஏற்பாடு செய்து முதல்வரையே  அழைத்து நடத்தி இருக்கலாம். ஆனால் இதைத் தனது சொந்த மண்ணில் நடத்த வேண்டும் என்று விரும்பி இதைச் செய்கிறார் என்றவர்,ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு சிவகுமார் தந்து வரும் ஆதரவையும் பங்களிப்பையும் பற்றிக் குறிப்பிட்டு நன்றி கூறினார்.

வாழ்த்துரை வழங்க வந்த சக்தி மசாலா குழுமத்தின் உரிமையாளர் பி.சி. துரைசாமி அவர்கள், திருக்குறள் தன் வாழ்வில் பெற்றுள்ள இடத்தையும் தன் வாழ்க்கை மாறிய விதத்தையும் கூறி, தனது நிறுவனம் பல சாதனைகளையும் பல வெற்றிகளையும்  செய்து வருவதற்குத் திருக்குறள் தான் காரணம் என்று எடுத்துரைத்தார்.தனது வாழ்வின் வழிகாட்டு நூலான திருக்குறள் சார்ந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக அவர் கூறினார்.
 சக்தி மசாலா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி சாந்தி அவர்களும் அதையே வழிமொழிந்தவர்,தங்களது மண்ணின் மைந்தராக உள்ள சிவகுமார் தங்கள் பகுதியில் வந்து கலந்து கொண்டு உரையாற்றுவதற்காகத் தாங்கள் பெருமைப்படுவதாகக் கூறினார்.
திருக்குறள் அரங்கேற்று விழாவில் நடிகர் சிவகுமார் அவர்களின் உரை சுமார் 7 மணிக்குத் தொடங்கியது.முதலில் எழுத்தாளர்  பட்டுக்கோட்டை பிரபாகரின் மாமனார் வழக்கறிஞர் முத்து நாராயணன் நாத்திகராக இருந்தவர், ஆத்திகராக மாறிய அந்தத் தருணத்தை விளக்கி அது சார்ந்த குறளான ‘வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு’  என்ற குறளில் தொடங்கி  நூறாவது கதையாக மலக்குழி இறங்கும்  துப்புரவுத் தொழிலாளியின் கதையைக் கூறி ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று அதற்குரிய குறளைக் கூறி இரவு சுமார் 10.30 மணிக்கு நிறைவு செய்தார். 

இதற்கிடையே கூறப்பட்டவர்களின் கதைகளில் சாமானியர்கள் முதல் சரித்திர புருஷர்கள் வரை உழைப்பாளி முதல் போராளிகள் வரை இடம்பெற்றார்கள். வெறும் வரலாற்றையும் சொல்லிக் கொண்டிருக்காமல் வரலாற்று நாயகர்களை மட்டும் குறிப்பிட்டுக் கொண்டிருக்காமல் சராசரி மனிதர்களின் வாழ்க்கைச் சம்பவங்களையும் எடுத்துக்காட்டி ஒரு கலவையான உணர்வுகளைத் தூண்டும் அனுபவமாக இந்த நிகழ்ச்சியை மாற்றினார்.

செங்காட்டுத் தோட்டம் ஆத்தா. அம்மா, சின்னத்தம்பி மாமா, பொங்கியாத்தாள், சின்னம்மா  எனத் தனது உறவினர்கள் மண்ணின் மைந்தர்கள் சிலரையும் ,பூலித்தேவன்,  வேலு நாச்சியார் ,தீரன் சின்னமலை போன்ற வரலாற்று நாயகர்களையும் ஓமந்தூரார், பெரியார் ,ராஜாஜி, காமராஜர், ஜீவா, அண்ணா, கலைஞர், எம்ஜி ஆர்  எனத் தமிழக அரசியல் தலைவர்களையும் காந்தி, லால் பகதூர் சாஸ்திரி,மொரார்ஜி தேசாய் போன்ற தேசியத் தலைவர்களையும்காரல் மார்க்ஸ் , நெல்சன் மண்டேலா போன்ற உலகத் தலைவர்களையும் திரைப்பட அதிபர்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் பி. ஆர். சுந்தரம், நாகிரெட்டி,எஸ். எஸ். வாசன், ஏவி.எம் மெய்யப்பன்,சாண்டோ சின்னப்பா தேவர்,கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, திரை நட்சத்திரங்கள் எம் .கே. தியாகராஜ பாகவதர், கே. பி. சுந்தராம்பாள், பத்மினி,எம்ஜிஆர், சிவாஜி,  எஸ்.வி.சுப்பையா,சத்யராஜ், இயக்குநர்கள் கே. எஸ். கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், கே. பாலச்சந்தர் என திரை உலகப் பிரபலங்களையும் அவர்களதுவாழ்க்கை நிகழ்ச்சிகள் வழியாக வலம் வரச் செய்தார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன், சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரம் ,நீதிபதி சந்துரு, மார்க்சிய எழுத்தாளர் கோவை ஞானி, ஓவியர் மனோகர் தேவதாஸ், தன்னம்பிக்கைப் பேச்சாளர் இன்ஸ்பயரிங் இளங்கோ  என வெவ்வேறு வகையில் தன் மனம் கவர்ந்த மாந்தர்களையும் கதைகளில் நடமாட வைத்தார். இப்படிச் சராசரி மனிதர்கள் வரை சாதனையாளர்கள் வரை இந்த உரையில் ஊர்வலம் வந்தார்கள்.ஏன், சினத்தின் விளைவுகளைப் பற்றிக் கூறும் போது தன்னை  செல்பி எடுத்தவரின் அலைபேசியைத் தட்டிவிட்ட சம்பவத்தைக் கூட ‘செல்’லிடத்துக் காப்பான் சினம் காப்பான்’ குறளைக்கூறி நினைவு கூர்ந்தார்.  இப்படி அவர் கூறிய பல்வேறுபட்ட முகங்களிலிருந்தும் அனுபவங்களில் இருந்தும் அவரால் ஒரு சித்திரத்தை வரைய முடிந்தது.

சிவகுமார் தேர்வு செய்து பயன்படுத்திய திருக்குறள்களில் எளிமைக்காகப் பிரபலமாகிப் புகழ்பெற்ற குறள்களை மட்டுமல்ல, அதிகப் புழக்கம் இல்லாமல் அறியப்படாத பல ஆழமுள்ள  பொருள் கொண்ட குறள்களையும் இடம்பெறச் செய்தது இந்த நூல் முயற்சி சார்ந்து அவர் எவ்வளவு தூரம் ஆராய்ச்சியில்  இறங்கி ஆய்ந்து தோய்ந்துள்ளார்  என்பதை எடுத்துக்காட்டியது.அந்த வியப்பூட்டும் குறள்கள் என்னென்ன என்பதை நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
இந்த உரையை அவர் பலரது வழக்கமான மேடை உரையைப் போல் பேசிப் பார்வையாளர்களை சோர்வடையச் செய்யவில்லை.
பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில்  சுவாரஸ்யமாக மூன்றரை மணி நேரத்திற்கு மேல் அவர் உரையாற்றி நிறைவு செய்தார்.உரை நிகழ்ந்த போது வந்திருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கவனத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தார்.

சிலவற்றைக் கதை போலவும், சில கவிதை போலவும், பாடல் போலவும் ,உணர்ச்சிமிக்க வசனங்களைப் பேசுவது போலவும், சிலவற்றுக்கு ஏற்ற முகபாவனைகளைக் காட்டி நடித்தும் காட்டி  இயல் ,இசை, நாடகம் என மூன்று தமிழையும் வெளிப்படுத்தினார்.

ஆங்காங்கே வீரம், ஆவேசம், எழுச்சி, பாசம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, துயரம், இழிவு, நம்பிக்கை, நகைச்சுவை என பலவண்ண ரசங்கள் காட்டும் அனுபவங்களை மாறி மாறிக் கூறி இந்த  உரையில் ஓர் கலைடாஸ்கோப் அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்கினார். பேசும்போது பதற்றமோ மனநெருக்கடியோ அவரிடம் தென்படவில்லை. உரை  தயாரிக்கப்பட்டது போல் தோன்றாமல் வெகு இயல்பாகப் பேசினார்.அவர் ஒவ்வொரு குறளுக்கான கதை சொல்லும் போதும் திரையில் அந்தக் குறள் காட்சி வழியாக வரி வடிவத்தில் நேர்த்தியாகக் காட்டப்பட்டது . அந்த வகையில்  நவீன தொழில்நுட்பத்திற்கு ஒத்திசைவாக  80 வயது தாண்டியும் தன்னால் இயங்க முடியும் என்பதை நிரூபித்தார்.இதன் மூலம்  காலத்திற்கு ஏற்ப பயணம் செய்யும் ஒரு கலைஞராக அவர் தெரிந்தார்.

ஏற்கெனவே சிவகுமார் எழுதிய ‘இது ராஜபாட்டை அல்ல ‘என்கிற சுயசரிதை நூல் 13 பதிப்புகள் கண்டு சாதனை படைத்தது. 1946முதல் 1975 வரையிலான தன் டைரிக் குறிப்புகளிலிருந்து தொகுத்த முதல் தொகுதியான ‘டைரி’ நூலும் பெரும் வரவேற்பு பெற்றது.
அவர் ஆற்றிய உரைகள் பலவும் நூல் வடிவம் பெற்றுள்ளன. அப்படி ‘கம்பன் என் காதலன் ‘என்கிற முழு ராமாயண உரையும் மகாபாரதம் பற்றிய ‘மகாபாரதம்’ உரையும் காவியச் சுவை கொண்டவை எனப் பாராட்டப் பட்டன. இவ்வகையில்   மேடையில் உரையாற்றி நூல் வடிவம் பெற்றவை,  ‘செங்காட்டிலிருந்து சென்னை வரை’, ‘நேருக்குநேர்’  , ‘தவப்புதல்வர்கள்’, ‘சங்கத் தமிழ் முதல் கவியரசு தமிழ் வரை ‘, ‘பெண்’, ‘என் செல்லக் குழந்தைகளுக்கு’, ‘தமிழ் சினிமாவில் தமிழ்’, ‘என் கண்ணின் மணிகளுக்கு’   போன்றவையாகும்.
இந்தத் திருக்குறள் 100 அரங்கேற்று விழாவில் பேச்சாளுமைகள் தமிழருவி மணியன், இளம்பிறை மணிமாறன் ஆகியோருடன்நடிகர் கார்த்தி, திருமதி லட்சுமி சிவகுமார்,  பிருந்தா சிவகுமார் என, சிவகுமாரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டார்கள்.