தோழர் என்ற உறவால் உலக மானுடம் தழுவி நின்றவர்!-பிருந்தா சாரதி அஞ்சலிக் கவிதை!

பொதுவுடைமை இயக்கத் தலைவர் என். சங்கரய்யா அவர்கள் மறைவையொட்டி இயக்குநர் வசனகர்த்தா பிருந்தா சாரதி எழுதியிருக்கும் அஞ்சலிக் கவிதை!

‘தகைசால் தமிழர்’
தோழர் சங்கரய்யா அவர்களுக்கு அஞ்சலி!

பாதையைப் பொதுமையாக்கினார்

பயணத்தை மக்களுக்காக்கினார்

சுவாசத்தைக் கூடத்
தொழிலாளர்க்காக்கினார்

தன் வாழ்க்கையையே வரலாறாக்கினார்.

*
அடிமை நாட்டில் சுதந்திர முழக்கமிட்டார்

வறுமையை ஒழிக்கச் சிகப்புக் கனவு கண்டார்

சாதி இருள் விரட்ட
வெளிச்ச விதைகளிட்டார்

சமத்துவம் காணச் சாகும் வரை உழுது நட்டார்.
*
தோழர் என்ற உறவால்
உலக மானுடம் தழுவி நின்றார்

தொண்டையே சுவடாய் தொடர்ந்து பதித்து வந்தார்

தகைசால் தமிழர் விருது பெற்றார்

பரிசாய் வந்த தொகையையும்
தொடாமலேயே
கொரானா நிதிக்களித்தார்.
*
தியாகமே உருவம் சங்கரய்யா
இனி இவர் போல் ஒருவரை எங்கு காண்பதையா?

இன்று
இயற்கையும் எம்முடன் அழுகிற காட்சியையா
எழுந்து பார் நாடே போற்றும் உன் மாட்சி அய்யா!
*
பிருந்தா சாரதி