புதுமுக இயக்குநரிடமும் கற்றுக்கொள்கிறேன்! நாசர் தன்னடக்க பேச்சு

DSC_3658_resizeபுதுமுக இயக்குநரிடமும் கற்றுக்கொள்கிறேன் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின்  தலைவர் நாசர் ஒரு சினிமா விழாவில் பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு

புதுமுக இயக்குநர் மனோன் .எம் இயக்கியுள்ள படம் ‘கா..கா..கா..’ இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது.

இயக்குநர் மனோன் ஒரு பெங்களூர்த்தமிழர்.  இவர் ‘இருவர் மட்டும்’ ராகவன்,பி.வாசு, வெற்றி மாறன் ஆகிய பிரபல இயக்குநர்களிடம் பணியாற்றியுள்ளவர். பொதுவாக காகம் கத்தினால் விருந்தினர் வரவின் அறிவிப்பு என்று நம்பப் படுகிறது. இப்படத்தில் ஆபத்து வரும் அறிகுறியாக காகம் கத்துகிறது.படத்தில் காகம் ஒரு பாத்திரம் போலவே வருகிறது.

அசோக்,மேகாஸ்ரீ ,நாசர்,ஜெயசுதா,யோகிபாபு நடித்துள்ளார்கள்.இப்படம் தமிழ் தெலுங்கு என ஒரு மொழிகளில் தயாராகியிருக்கிறது.அர்பிதா கிரியேஷன்ஸ் சார்பில் கிரண் பதிகொண்டா தயாரித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுவிழா இன்று சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடந்தது.தென்னிந்திய நடிகர் சங்கத்தின்  தலைவர் நாசர் ட்ரெய்லரை வெளியிட  இயக்குநர்  வெற்றி மாறன் பெற்றுக்கொண்டார்.

nazer1விழாவில் நாசர் பேசும் போது ”புதுமுக இயக்குநர்கள் படம் பண்ணும் போது கனவோடு வருகிறார்கள்.அவர்களை நான் ஆதரிக்கத் தயங்குவதில்ல்லை.

இந்த மனோன் என்னிடம் நடிக்கக் கேட்டு கதை சொன்னபோது நான் எந்த அளவுக்கு அவசியம்? ஏன் நான்  நடிக்க வேண்டும்? என்றேன்.அவர் அதற்குச் சரியாகப் பதில் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது. .ஒவ்வொரு புதுமுக இயக்குநரிடமும்  நான் கற்றுக்கொள்கிறேன்.இந்தப் புதுமுக இயக்குநரிடமும் நான் கற்றுக்கொண்டேன்.எது வேண்டும் எது தேவை என்பதில் அவர் தெளியாக இருந்தார்.நல்ல திட்டமிடல் இருந்தது. இன்று டிஜிட்டல் வந்த பிறகு எப்படி வேண்டுமானாலும்  படம் எடுக்கலாம் என்று நினைக்கிறார்கள்.ஆனால் மனோன் அப்படிப்பட்ட ரகமல்ல. அவரிடம் நல்ல திட்டமிடல் இருந்தது.தொழில் சிரத்தை உள்ளவர். முழுப்படத்தையும் திட்டமிட்டு எடுத்தார்.

இன்று தினசரிப் பத்திரிகையைப் புரட்டிப்பார்த்தால் 60படங்களின் விளம்பரங்கள் வருகின்றன.எதைப்பார்ப்பது என்று மக்களுக்கே குழம்புகிறது.இருத்தாலும் இந்தப்படம் அதிலும் தனித்து தெரியும்படி வெற்றிபெற வேண்டும்.சினிமாவுக்குத் தயாரிப்பாளர் முக்கியம்.தயாரிப்பாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.இப்படம் நூறு நாள் ஓடவேண்டும் என்பதை விட முதலில் தயாரிப்பாளர் போட்ட முதலீட்டை திரும்ப எடுத்து வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ”என்று வாழ்த்தினார்.

இயக்குநர் வெற்றி மாறன் பேசும்போது ” இந்த மனோன் ,என் தயாரிப்பில் பணியாற்றியவர்.ஆர்வமாக உழைப்பவர்.என்னிடம் இப்படம் தொடங்கும் போது கேட்டார்.தயாரிப்பாளர் கஷ்டப்படாமல் திட்டமிட்டு எடுக்கவேண்டும் என்றேன்.இந்த ட்ரெய்லர் சுவாரஸ்யமாக இருக்கிறது.ஹாரர் படத்தில் சவுண்ட் முக்கிய இடம் வகிக்கும்.அதை இதில் சரியாகக் கையாண்டு இருக்கிறார்கள்.ஒளிப்பதிவும் இசையும் நன்றாக இருக்கிறது.” என்றார்.

நடிகர் அசோக் பேசும்போது ” இன்று எனக்கு முக்கியநாள்.இது எனக்கு எதிர்பார்ப்புக்குரிய தருணம்  இப்படத்தில் கதை புதியதாக இருக்கிறதா என்பதைவிட நிச்சயமாகபுதுமையாக சொல்லி இருக்கிறோம்  என்று கூறலாம். திறமையான தொழில்நுட்பக் குழுவினர் உருவாக்கிய படம் இது.
ஒரு படம் பெரிய படமா சிறிய படமா என்பதை யாரும் சொல்ல முடியாது அதை ஆடியன்ஸ்தான் முடிவு செய்வார்கள் .அவர்கள் தருகிற ஆதரவு ஆசீர்வாதம்தான் முடிவு செய்யும் ” என்றார்.

இயக்குநர் மனோன் .எம் .பேசும் போது ” நான்   ‘பை டூ’  அதாவது ‘இருவர் மட்டும்’ ராகவன் ,வெற்றிமாறன், பி.வாசு என 3 இயக்குநர்களிடம் பணிபுரிந்துள்ளேன். வெற்றி மாறனின் ‘விசாரணை’ உலகெங்கும் பாராட்டப் படுவது எனக்கும் பெருமையாக இருக்கிறது. வாசு சார் அப்டேட்டாக இருப்பவர். இந்தப்படத்தில் நான் புதியவன் என்று பார்க்காமல் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.நாசர் சார் இவ்வளவு சீனியர் அனுபவசாலியாக இருந்தாலும் முதல் நாளே எடுக்க வேண்டிய காட்சிகளை கேட்டு வாங்கி தயாராகி வருவார் . அசோக் நீருக்கடியில் எடுத்த காட்சியில் நீருக்கடியில் மூழ்கி அடிபட்டு உதடு கிழிந்து ரத்தம் கொட்டியும் நடித்து முடித்து விட்டுத்தான் மருத்துவமனை போனார். அவ்வளவு அர்ப்பணிப்பானவர்.

மேகாஸ்ரீ நள்ளிரவு 2 மணி வரை நடித்துக் கொடுத்தார். இப்படி அனைவரும் உதவியதால்தான் படத்தை  விரைவில் முடிக்க முடிந்தது. தயாரிப்பாளர் கிரண் ஒரு உதவி இயக்குநர் போல உழைத்தார்” என்றார்.

விழாவில் நடிகை மேகாஸ்ரீ ,தயாரிப்பாளர் கிரண் ஆகியோரும் பேசினார்கள்.