என்னைப் பாராட்ட வேண்டாம்! ஜேம்ஸ் வசந்தன்

jamesvasantan2ஜேம்ஸ் வசந்தன்  இயக்கத்தில் ஒசியானா ஏஜேஆர் சினி ஆர்ட்ஸ் பி லிட் சார்பில் உருவாகும் படம் ‘வானவில் வாழ்க்கை’ . இப்படத்தில்புதுமுக நடிகர்கள்  ஜிதின், ஜோஸ் செல்வராஜ், ஜோனத்தான், சாய் சங்கர், கெஸான்டரா, ஜனனி ராஜன், ஷில்வி ஷாரோன், மாயா, ராதிகா ஜார்ர்ஜ், ‘கானா’ சிவா, பவித்ரன், திருமதி.சௌமியா ஆகியோர் நடித்துள்ளனர். ‘வானவில் வாழ்க்கை’ திரை இந்தியாவின் முதல் மியூசிக்கல் பிலிம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படத்தில் மொத்தம் 17 பாடல்கள் உள்ளன. இப்படத்தில் அறிமுகமாகும் கலைஞர்கள் அனைத்து பாடல்களையும் பாடி நடித்துள்ளனர்.

கதை திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை,இயக்கம் ஜேம்ஸ் வசந்தன் .ஒளிப்பதிவு ஆர்.கே. பிரதாப் ,நடனம் ஜான் பிரிட்டோ, படத்தொகுப்பு சாபு ஜோஸப், கலை- உமேஷ்குமார், ஆடை வடிவமைப்பு -சந்தீப் ரவி.படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் வசந்த் டிரைலரை வெளியிட்டார். இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் ‘கோ’ ‘அங்காடி தெரு’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் இருவரும் பாடல்களை வெளியிட்டனர் மேடையில் திரைப்பிரபலங்களை அழைத்த ஜேம்ஸ் வசந்தன் தன்னைப் பற்றிப் பேசாமல் தன் அறிமுகங்களை வாழ்த்த வேண்டும் என்றார். அப்படியே அவர்களும் செய்தார்கள்.

vanavil-trlr”ஜேம்ஸ் வசந்தனை எனக்கு ஒரு இசையமைப்பாளராக மிகவும் பிடிக்கும். அவரது பாடல்களுக்கு நான் ரசிகன். ‘மெலோடி கிங்’ இவர் ”என்று வாழ்த்தி டிரைலரை வெளியிட்டார் இயக்குநர் வசந்த்.

‘பசங்க’ இயக்குநர் பாண்டிராஜ் பேசும் போது, ‘ஜேம்ஸ் எனக்கு சினிமாவைப் பற்றி நிறைய சொல்லி கொடுத்தவர். படத்தின் தயாரிப்பு நேரம் மற்றும் அதன் செலவுகளை உணர்ந்தவர். என்னை ஒரு மியூசிக்கல் படம் செய்ய சொன்னார். அதிலிருந்து நான் லாவகமாக விலகினேன். இன்று அத்தகைய ஒரு விஷயத்தை அவரே சாதித்து காட்டியுள்ளார்’ என்றார்.

வானவில் வாழ்க்கை படத்தின் இசையமைப்பாளர் மற்றும் இயக்குநர் ஜேம்ஸ் வசந்தன் பேசும்போது, “எனது பல இயக்குநர் நண்பர்களை ஒரு மியூசிக்கல் பிலிம் செய்ய சொல்லி கேட்டுக்கொண்டே இருப்பேன். இன்று அப்படி ஒரு நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. இந்த திறமைமிக்க இளைஞர் பட்டாளம் எனக்கு இந்த படத்தை உருவாக்குவதில் பெரிதும் உதவினர். இப்படத்தை தயாரித்த எனது தயாரிப்பாளர்கள் ஓசியானா ஏ.ஜே.ஆர். சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தார்க்கு எனது நன்றிகள்” என்றவர் தன் படக்குழுவினர் 22 பேரை மேடையேற்றினார்.அவர்களுக்கு வாழ்த்துகளையும் பெற்றுக்கொடுத்தார்.

ஜேம்ஸ் வசந்தன் எதைச் செய்தாலும் அதில் ஒரு முறைமை, ஒழுங்கு ,மரியாதை இருக்கும். இவ்விழாவிலும் அது தெரிந்தது.