‘லிங்கா’விமர்சனம்

linga8ரஜினி,சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, ஜெகபதிபாபு, கே.விஸ்வநாத்,விஜயகுமார், ராதாரவி, சந்தானம்,
நடித்துள்ளனர்.

விவசாயம் செழிக்க அணை ஒன்றைக் கட்டப் போராடும் நாயகனின் கதை.

ராஜாவின் பேரன் ஒருவன் திருடனாகி விடுகிறான். ஊரைவி ட்டு ஒடிப்போனவனை ஊருக்கு அழைத்து வந்து இழந்த மரியாதையை மீட்டுத்தரும் நாயகியின் கதை.

ஊருக்கு அணை கட்டுபவர் சந்திக்கும் அவமானங்கள் பின்னர் மீட்கும் மரியாதை பற்றியதான கதை.

இதில் எதை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் அது தான் லிங்காவின் கதை.

அந்த ஊர் சோலையூர். அங்கு ஓர் அணைக்கட்டு. அதன் அருகே ஒரு கோயில் பூட்டியது திறக்கப் படாமலேயே கிடக்கிறது. அதன் அருகே ஒருவனை கொலைசெய்கி றார்கள். சாகும் தருவாயில் அவன் சொல்கிறான். இந்தக் கோயிலை ராஜாவின் பேரன் வந்து திறந்தால்தான் அணைக்கும் மக்களுக்கும் ஆபத்து வராது என்று கூறுகிறான்.

அவனைத் தேடுகிறார்கள். அவ்வூர் பெரியவரின் பேத்தி தேடிப் புறப்படுகிறாள். ராஜாவின் பேரனோ சென்னையில் திருடனாக வலம் வருகிறான்.அவனைக் கண்டுபிடித்து ஊருக்கு கொண்டுவர முயற்சிக்கிறாள்.அவனோ ஜெயிலில் இருக்கிறான். சாமீனில் எடுக்கிறாள் .  தாத்தா தனக்கு எதுவும் செய்யவில்லை சேர்த்து வைக்கவில்லை என்று வர மறுக்கிறான்  அவன் புத்தி போகவில்லை.அவன் திருடுவதை ரகசிய கேமரா மூலம் படம்பிடித்து மிரட்டி ஊருக்குக் கொண்டு வருகிறாள்.

வந்த திருடன் அண்ட் சகாக்கள் கோயிலிலுள்ள மரகதலிங்கத்தை திருடி செட்டில் ஆக திட்டம் போட..

அவன் தான் யார் என்று அறியச்செய்யும் ப்ளாஷ்பேக். 1939க்குப் பயணிக்கிறது கதை. பிரிட்டிஷ் ஆட்சிக்காலம்.கலெக்டராக இருக்கும் லிங்கேஸ்வரன்  அணைகட்ட விரும்ப அதற்கு அரசு தடைபோட பதவிவிலகி மக்களுக்காக தன் சொத்தெல்லாம் விற்று எப்படி அணைகட்டுகிறார் என்று முடிகிறது.

தன் தாத்தாவின் பெருமையை உனர்ந்து அணைக்கட்டு அருகே உள்ள கோயிலை திறந்து வைத்து தடைகளை எப்படிஇளைய லிங்கா வெல்கிறான் என்பதே கதை.

கதையும் திரைக்கதையும் பெரிய பலமாக இல்லை என்றாலும் பிரமாண்டத்தை வெளிப்படுத்த இடமுள்ள கதை.

முதல்பாதி திருடனாக வரும் ரஜினி, சந்தானம், கருணா, பாலாஜி திருடப்போகும் இடத்தில் செய்யும் கலாட்டா.. கல கலப்பு. அனுஷ்கா வந்ததும் கிளுகிளுப்பும் கூடுகிறது.

ப்ளாஷ்பேக்கில் வரும் சோனாக்ஷி ஜாக்கெட் போடாத அக்கால பெண்ணக வருகிறார்.

இக்கால ரஜினிக்கு மூத்த அனுஷ்கா ஜோடியாம் அக்கால ரஜினிக்கு சோனாக்ஷி ஜோடியாம். ஏனிந்த முரண்?

ரஜினி இதில் வழக்கம் போல துறுதுறு பரபர ஸ்டைலில் சளைக்கவில்லை.அழகாகவும் தெரிகிறார். அவர்தான் நல்ல உடல்நலமாக இருக்கிறாரே ஏன்.. அவரது மூளை, இதயம், கிட்னி நுரையீரல் பற்றி சிலாகித்து அடிக்கடி வசனம்.? இரண்டு ரஜினியில் முன்கதையில் வரும் ரஜினிதான் பல வகை நடிப்பு காட்ட வாய்ப்பு பெற்றவர். அதில் துடுக்காக,மிடுக்காகச் செய்திருக்கிறார்.

அதுசரி.. இளைய ரஜினி ராஜவம்ச பேரனை ஏன் ஒரு திருடனாகக் காட்ட வேண்டும்? அவரது பெற்றோர் பற்றி எதுவும் கூறாதது ஏன்?

அந்த அணை கட்டப்படும் காட்சியில் பிரமாண்டம் தெரிகிறது. கலை இயக்குநரின் அமரனின் உழைப்பும் தெரிகிறது. .

ஒளிப்பதிவாளர் ராண்டி என்கிற ரத்னவேலு, தயாரிப்பு வடிவமைப்பு சாபுசிரில். அவர்களது உழைப்பு தெரிகிறது.

ஏ ஆர். ரகுமானின் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணியில் தனிமை.

ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா,கே.விஸ்வநாத், ஜெகபதிபாபு, விஜயகுமார், ராதாரவி, சந்தானம் என்று பெரிய நட்சத்திரக் கூட்டமே இருந்திருக்கிறது. இவ்வளவு பெரிய நட்சத்திரக் கூட்டத்தை பரி வாரங்களை வைத்துக் கொண்டு இயக்குநர் பலகாட்சிகளை அவசர கதியில் எடுத்திருப்பது தெரிகிறது. குறிப்பாக முதல் பாதி இழுவைதான். ரஜினி திருடன் என்று காட்ட ஏன் இவ்வளவு நேரம்.. இப்படி கத்தரிபோட வேண்டிய நிறைய நீளமான காட்சிகள் உண்டு.

ரஜினி ரசிகர்களுக்கான படமாக எடுத்துள்ளதாக நினைத்து எடுத்துள்ளார். ஆனால் ஆங்காங்கே நாடகக்தனம் மேலோங்கியிருக்கிறது .

ரசிகர்கள் சிவாஜி, எந்திரன் எல்லாம் பார்த்தவர்கள் என்பதை இயக்குநர் மறந்துவிட்டாரா?.

எனவே ஆயிரம் இருந்தும் அவசரம் இருந்ததால் ஏதோ ஒரு ஏமாற்றம் எழுவதை தவிர்க்க முடியவில்லை ரஜினியை அழகாகக் காட்டியுள்ளனர்.ஆனால்  ரஜினியைஅனுஷ்கா தொடும் அளவுக்கு அழுத்தமான காட்சிகள் மனதைத் தொடும்படி  இல்லையே..ஏன் ரவிக்குமார்?